மனிதர்களின் இனப்பெருக்கத்திற்கு மட்டுமல்லாமல் உடலும், உள்ளமும் பேரின்பம் அடைவதற்கான வழிமுறையாகவும் தாம்பத்ய வாழ்க்கை இருக்கிறது. ஓரிரு குழந்தைகளை பெற்ற பிறகு இல்லற வாழ்வு தேவையில்லை என்று யாரும் ஒதுக்கி விடுவதில்லை. உடலில் வலுவும், உள்ளத்தில் கிளர்ச்சியும் இருக்கும் வரையில் ஆணும், பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், சில காரணங்களால் தம்பதியர்களில் யாரோ ஒருவருக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறையத் தொடங்கி விடுகிறது. இருப்பினும் நீண்ட காலத்திற்கு பாலியல் உறவு இல்லாமல் போனால் தம்பதியர்கள் இடையே அன்பும், பிணைப்பும் குறையத் தொடங்கிவிடும். அதன் காரணமாக சண்டைகள் சாதாரணமாகிப் போகும். நாளடைவில் விவகாரத்து ஏற்படுவதற்கும் கூட வாய்ப்பாக அமைந்துவிடும். அதிலும் பெண்களுக்குத்தான் பாலியல் ஆசை முதலில் குறைகிறதாம். இதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கருத்தடை மாத்திரைகள் :
ஒரு குழந்தை பெற்ற பின்பு மீண்டும் உடனடியாக கருத்தரிப்பதை தவிர்க்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துவதால் சிலருக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு பாலியல் உறவில் நீடித்து நிற்கும் நேரம் குறையத் தொடங்கும்.
சமீபத்தில் பிறந்த குழந்தை :
சமீபத்தில் பிரசவமான தாய்மார்களுக்கும் கூட பாலியல் உறவு மீது நாட்டம் இல்லாமல் போகலாம். பிரசவித்த பிறகு குறைந்தபட்சம் 6 வாரங்கள் வரையிலாவது காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஸ்ட்ரெஸ் காரணம் :
நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகரிப்பதால் உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் உற்பத்தியாகும். அது பாலியல் ஆசையை மட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கு தாயாகவும், இல்லத்தரசியாகவும் பெண்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் மிகுதியாக இருப்பதால் சுயநலனுக்கு முன்னுரிமை அளிக்க முடியாமல் போகலாம்.
தீர்க்க முடியாத பிரச்சனைகள் :
பல தம்பதியர்கள் சண்டைக்குப் பின் உடலுறவு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது மனக்குறைகளை போக்கி சமாதானம் அடைய உதவுகிறது. ஆனால், தம்பதியர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் போனால் உடலுறவு மீதான நாட்டம் குறைந்துவிடும்.
நேரமின்மை : ஆண், பெண் இருவருமே இப்போது வேலைக்குச் சென்று சம்பாதிப்பது அவசியமாகிறது. துரதிருஷ்டமாக கணவனின் பணி நேரமும், மனைவியின் பணி நேரமும் வெவ்வேறாக அமைகிறது. இருவரும் வீட்டில் இணைந்திருக்கும் நேரமே மிக குறைவு என்ற நிலையில், அவர்களுக்கு பாலுறவு குறித்து சிந்திக்க நேரமில்லாமல் போகிறது.
இதர காரணங்கள் :
பெண்கள் கர்ப்பம் அடைந்திருப்பின் அவர்களுக்கு பாலுறவு மீதான நாட்டம் குறையத் தொடங்கும். போதுமான தூக்கமும், ஓய்வும் இல்லை என்றாலும் கூட ஆர்வம் இருக்காது. பாலியல் உறவில் புத்தம்புது யோசனைகள் மற்றும் விளையாட்டுகளை பயன்படுத்த தவறும் பட்சத்திலும் கூட ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. அதே போல, உறவில் சுவாரஸ்யங்கள் அல்லது மகிழ்ச்சியான தருணங்கள் இல்லை, தம்பதிகளுக்கிடையேயான வாழ்க்கை ஒரே மாதிரி இயந்திரம் போல இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.