தெரியாத நபருக்கு தவறுதலாக பணம் அனுப்பினால், அதை எப்படி திரும்ப பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒருவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால், வங்கிகளில் காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஆனால், தற்போது இருந்த இடத்திலிருந்து ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு பணம் செலுத்த முடியும். அதற்காக யுபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் வந்து விட்டனன. தனியாக நேரம் ஒதுக்கி வங்கி வரை அலைந்து, தெரிந்து வருவதை தவிர்க்க இது பெரும் உதவியாக இருக்கிறது. அந்த விதத்தில் எண்ணற்ற மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், இதில் சாதகமான அம்சம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு ஏதாவது ஒரு குறைபாடுகளும் இருக்கத்தானே செய்யும். அதிலும், குறிப்பாக நம்முடைய கவனக்குறைவு காரணமாகவே இது போன்ற தவறுகள் சில சமயங்களில் உண்டாகின்றன.

நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அந்த நபருக்கு பதிலாக வேறொரு நபருக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் என்ன செய்வது? இந்த பணம் இனி நமக்கு திரும்ப கிடைக்குமா? அதனை எப்படி திரும்ப பெறுவது? என்ற கேள்விக்கு இந்த பதிவில் நாம் விடை தெரிந்து கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் படி தவறான பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கையாளர் புகார் வழங்கிய 48 மணி நேரத்திற்குள் அந்த பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற வங்கி உதவி புரியவில்லை என்றால் தொடர்புடைய நபர் bankingombudsman.rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் வழங்கலாம். தவறான பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கிகளிலும் நேரடியாக எழுத்துப்பூர்வமாக புகார் வழங்கலாம்.

என்னென்ன விவரங்கள் தேவை..?
தவறான பரிவர்த்தனை தொடர்பாக புகார் வழங்கும் போது வங்கி கணக்கு எண், கணக்காளரின் பெயர், பரிவர்த்தனை குறியீடு எண், பரிவர்த்தனை தேதி தொகை மற்றும் ஐ.எஃப்.எஸ் சி கோடு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். எந்த முயற்சியும் பலன் வழங்காத நிலையில் சட்ட நடவடிக்கை மூலமாக உங்களுடைய பணத்தை திரும்ப பெறலாம். அதாவது நீங்கள் தவறான ஒரு நபருக்கு பணம் வழங்கி விட்டீர்கள் என்றால், அதனை நீங்கள் திரும்ப கேட்கும் போது அவர் திருப்பி அளிக்க மறுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடர்புடைய நபருக்கு எதிராக நீங்கள் வழக்குப்பதிவு செய்யலாம். பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் பட்சத்தில் அது ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி பயனாளரின் வங்கிக் கணக்கு தொடர்பான சரியான தகவலை வழங்குவது லிங்கர்களின் பொறுப்பாகும். ஏதாவது காரணங்களுக்காக லிங்கர் தவறு செய்தால் அதற்கு வங்கி பொறுப்பேற்காது.