தமிழக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.. இந்நிலையில், இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. மேலும் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக “ ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. ரேஷன் கடைகளில் கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சிறு தானியங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.82 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.. 25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.. உழவர் சந்தைக்கு வரும் உழவர்களுக்கு சிற்றுண்ட், மூலிகை சூப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. பனை சாகுபடியை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.. விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்..” என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்..
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வேளான் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நெல் விவசாயிகளுக்கான அறிவிப்பு, அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை.. கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ.195 மட்டுமே அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர்..
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவை தொகை பற்றி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.. தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் அறிவிப்புகள் வெளியாகவில்லை..
தமிழக அரசு உரிய தார் பாய்களை வழங்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.. நீர்நிலைகளை பாதுகாக்க அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டுவிட்டனர்.. காவிரி – குண்டாறு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது கண்டனத்துக்குரியது.. வேளாண் மானிய கோரிக்கையில் உள்ளதை பட்ஜெட்டாக வாசித்துள்ளனர்..” என்று தெரிவித்தார்.