ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார்.
கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஏசியில் குறிப்பிட்ட வெப்பநிலையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தொடர்பான பரிசோதனையை இந்தியா விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஏசியில் இனிமேல் வெப்பநிலையை 20°C முதல் 28°C வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு வர உள்ளது. “ஏர் கண்டிஷனிங் தரநிலைகள் குறித்து, விரைவில் ஒரு புதிய கட்டுப்பாடு வரவுள்ளது. வரும் காலங்களில் ஏசியில் 20°C முதல் 28°C வரை அமைக்க முடியும். இனி 20°C க்கு கீழே மாற்றவோ அல்லது 28°C க்கு மேலே வைக்கவோ முடியாது” என்று அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்களிலும் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆற்றல் சேமிப்பு, மின் நுகர்வு குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வெப்பநிலை அமைப்புகளை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையான பரிசோதனை இதுவாகும்.” ஜப்பான் போன்ற நாடுகளில் இதை 26 டிகிரிக்கு தரப்படுத்தியது. இத்தாலி இதை 23 டிகிரியில் செய்துள்ளது, நாங்கள் அதை 20 டிகிரியாக மாற்றியுள்ளோம் என்றும் மத்திய அமைச்சர் கட்டார் தெரிவித்துள்ளார்.