வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வருகிற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாக சைதன்யா முதன்முறையாக சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ”நாங்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகளாகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஒரு வருடமாகிறது. சமந்தா ஒரு இனிமையான நபர். அவர் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் தகுதியானவர். ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் தான் எங்களுக்குள் அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
பொது பார்வையில் எங்கள் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் மரியாதை அது நீங்கியதாக பிம்பத்தை ஏற்படுத்தியது. இதை மிக மோசமானதாக கருதுகிறேன். எங்கள் நலம் விரும்பிகளுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பிறகே நாங்கள் பிரிவது என முடிவெடுத்தோம். நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கிறோம். அதுதான் எங்கள் உறவின் அடிப்படை. அந்த ஸ்பெஷலான பிணைப்பு எங்களுக்குள் தொடரும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.