இஸ்ரேல் -ஈரான் போர் தொடர்பான நேரலை நிகழ்ச்சியின் போது அலுவல கட்டிடத்தின் மீது இஸ்ரேல் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். கட்டிட கூரை சேதமடைய தொடங்கியதை அடுத்து நெறியாளர் உடனடியாக ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு தெஹ்ரானில் உள்ள ஈரானின் அரசு தொலைக்காட்சி IRIB கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. செய்தி தொகுப்பாளர் ஒருவர் இஸ்ரேல் மீதான நேரடி விமர்சனத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தாக்குதலின் போது, அவர் ஒளிபரப்பை விட்டு வெளியேறுவது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல் காரணமாக அந்தச் செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ‘உண்மையின் குரலை ஒடுக்கும் முயற்சி’ என இஸ்ரேலை குற்றம்சாட்டி மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.
ஈரானிய ஊடகங்களின்படி, இந்த தாக்குதலில் ஈரானிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் பல ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஒளிபரப்பின் போது, ”தாய்நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு சத்தத்திற்கு” பிறகு ஸ்டுடியோ தூசியால் நிரம்பிவிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், ஈரான் தலைநகரில் தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அமைந்துள்ள பகுதியை காலி செய்யுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பரவலாக தாக்குதலை நடத்தி இருந்தது இஸ்ரேல். மேலும், தாக்குதலுக்கு முன்னதாக தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்த அறிவிப்பை பாரசீக மொழியில் ஈரான் மக்களிடம் இஸ்ரேல் தெரிவித்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும், திங்கட்கிழமை அன்று இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.