ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை திருத்தம் செய்து மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி-யை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை மறு மதிப்பீடு மற்றும் சரிபார்த்தல் மூலம் 2025 ஜனவரி முதல் சந்தேகத்திற்குரிய சுமார் 3.02 கோடி பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. தட்கல் முன்பதிவு முறையில் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், நேர்மையான முறையில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவும் ஆன்லைன் தட்கல் பயணச்சீட்டுக்காக ஆதார் அடிப்படையிலான ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 4-ம் தேதியின்படி, இந்த பாஸ்வேர்டு முறை 322 ரயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளால் இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் பயணச்சீட்டு கிடைப்பது சுமார் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் தட்கல் பயணச்சீட்டுக்கு ஆதார் அடிப்படையிலான ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு முறை 211 ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை மூலம் 96 பிரபல ரயில்களல் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் பயணச் சீட்டுக் கிடைப்பது சுமார் 95 சதவீதம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.



