சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே தினம் தோறும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசிப்பதாலும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் பயணமே அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், தினசரி 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜனவரி 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட 7 ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு இரயில்வே அறிவிப்பின்படி..
1.சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 7:45 மணிக்கு பதிலாக காலை 8:00 மணிக்கு புறப்படும்.
2.சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 10:20 மணிக்கு பதிலாக, காலை 10:40 மணிக்கு புறப்படும்.
3.எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் , மதியம் 1:45 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது 1:15 மணிக்கு புறப்படும்.
4.எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதியம் 2:45 மணிக்கு பதிலாக 3:05 மணிக்கு புறப்படும்.
5.எழும்பூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7:30 மணிக்கு பதிலாக, இனி 15 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7:15 மணிக்கு புறப்படும்.
6.எழும்பூரில் இருந்து இரவு 8:10 மணிக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், இனி 35 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7:35 மணிக்கு புறப்படும்.
7.எழும்பூரில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இனி 8:35 மணிக்கு புறப்படும்.
8.எழும்பூரில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், இனி 8:50 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளாவின் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



