கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாணவர்கள் ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 15 சதவீதம் ஒதுக்கப்படுகின்றன, மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், பி.வி.எஸ்சி – ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025- 2026-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மே 26-ம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கியது. இணைய வழியில் விண்ணப்பிப்பது ஜூன் 20-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. விண்ணப்பத்தில் தவறு செய்திருந்தால், அதற்காக திருத்தம் மேற்கொள்ள மற்றும் விடுபட்ட சான்றிதழ் ஏதாவது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Read more: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!