மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும், சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் ஏற்கனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு இனி இந்த மாதத்தில் இருந்து வாரம் ஒரு முறை கோழிக்கறியும், அந்த பருவத்தில் கிடைக்கும் பழ வகைகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசால் 317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் தொடருமா என்பது முடிவு எடுக்கப்படவில்லை என்று மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த வருடம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியதால் கடும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் பெற்று வருகிறது.