தமிழகத்தில் சமீப காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
இதனால் வட இந்தியாவில் இருப்பதைப் போன்ற பயங்கரவாத சம்பவங்கள் தமிழகத்திலும் நடைபெறலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.
தமிழக அரசும், காவல்துறையும் இது போன்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அது வெறும் கண் துடைப்பு மட்டுமே என்று எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் முன் விரோதம் காரணமாக, நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி அதன் மூலமாக பழி தீர்க்க முயற்சி செய்வதாக கடலூர் மாவட்ட தெர்மல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் திடீர் சோதனையில் இறங்கினர். அப்போது முருகன் கோவில் தெருவில் ஒரு வீட்டிற்கு பின்னால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் தைல மரத்தோப்பில் பிளாஸ்டிக் வாலியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 3க்கும் அதிகமான குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அகிலன் (23) மற்றும் அவருடைய நண்பரான 16 வயது சிறுவன் உள்ளிட்டோரை பிடித்து நாட்டு வெடிகுண்டை எங்கு தயாரித்தீர்கள்? எத்தனை வெடிகுண்டுகள் வைத்திருக்கிறீர்கள்? யாரை பழி தீர்ப்பதற்காக இதை செய்தீர்கள்? இதில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்று பலவித கோணங்களில் நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து நாட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்து இருக்கிறார்கள். இதனால் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.