பொதுவாக பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே தெரிந்து கொண்டால் புற்றுநோய் உண்டாவதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வேறு வகையான புற்றுநோய்களை பொறுத்தவரை, நோயால் பாதிக்கப்பட்ட பிறகே இதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பொறுத்தவரை, இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதுநாள் வரை, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, இந்தியாவிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது.
அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ஆம் வருடத்தில் இந்தியாவின் 12 -இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ஆம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளித்தனர். இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்வது பெருமைக்குரிய விஷயம் என்று டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.