கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. இங்குள்ள 7வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர். தமிழ்நாட்டிலேயே மிகவும் கடினமான மலைப்பாதையை கொண்டுள்ள மலை இது.
வெள்ளியங்கிரி மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி தருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலையேற்றத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தர்மபுரியிலிருந்து கோவைக்கு வந்து டி.பார்ம் படித்து வந்த மாணவன் முகேஷ்குமார், நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார்.. இன்று அதிகாலை 5-வது மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்த அந்த மாணவன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான்.
உடனடியாக அங்கிருந்த வனத்துறையினர் மாணவனை மீட்டு டோலி மூலம் மலையடிவாரத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நண்பர்களுடன் சிவனை தரிசிக்க வந்த மாணவன் உயிரியந்த சம்பவம் அவரின் நண்பர்களையும், அங்கிருந்த மற்ற பக்தர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: ரயில் பயணிகளுக்குப் பெரும் நற்செய்தி..! விதிகளில் மாற்றம்! முழு விவரம் இதோ..!



