தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்..
இந்த சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சரத் தனது குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில் பேசிய அவர் “ ஒரு தவறான வதந்தி பரப்பி வருகிறார்கள்.. 2 ஆண்டுக்கு முன்பு ஒரு ஐபிஎல் போட்டிக்கு சென்றிருந்தோம்.. குடும்பத்தினர், நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தோம். என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை. குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன்.
கிரிக்கெட் மைதானத்தில், அவ்வளவு காவல்துறை பாதுக்காப்பு இருக்கும். அத்தனை கேமராக்களுக்கு முன்பாக, அத்தனை பேருக்கு முன்பு எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்..? குழந்தைக்கு மாத்திரையை கொடுக்க அந்த மாத்திரையை பொடியாக்கிய போது, வீடியோ எடுத்துள்ளனர்.. அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பரப்புகின்றனர்.. இது மனதுக்கு கஷ்டமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
எனினும் அமைச்சர் சரத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து முதல்வர் விஜய் அவர்கள் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தவெக அமைச்சரின் தன்னிலை விளக்க வீடியோ திருப்தியளிக்கவில்லை! தவெக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சரத் பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது.
சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, “ஆன்டிபயாடிக்” உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே, மருத்துவர்கள் “டானிக்” வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை, உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு தகப்பன் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா?
குறிப்பாக, குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே “ரெடி” செய்யும் மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்?
இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதல்வர் திரு விஜய்
அவர்கள் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.



