தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாலை நேரத்தில் சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் அவல் இருந்தால், வழக்கமான பஜ்ஜி அல்லது பக்கோடாவுக்கு பதிலாக சுவை நிறைந்த அவல் பக்கோடாவை செய்து அசத்தலாம். இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருப்பதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும், குறைந்த நேரத்தில் எளிதாக தயாரிக்கக்கூடிய மாலை நேர சிற்றுண்டியாகவும் இது சிறந்த தேர்வாகும்.
இந்த அவல் பக்கோடா செய்வதற்கு முதலில் ஒரு கப் அவலை தண்ணீரில் நன்றாக அலசி, தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு சுமார் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். அவலை நீண்ட நேரம் ஊறவைக்க தேவையில்லை. பின்னர் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், வேகவைத்து மசித்த ஒரு உருளைக்கிழங்கு, அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
அதன்பின் கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் ஓமம், தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள்ஸ்பூன் உடைத்த அல்லது லேசாக வறுத்த வேர்க்கடலை மற்றும் மூன்று டேபிள்ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலக்க வேண்டும். தேவையான அளவு மட்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உருளைக்கிழங்கு நன்றாக மசிந்து அனைத்து பொருட்களும் ஒன்றாக இணையும்வரை கைகளால் பிசையவும்.
பிறகு கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, கலவையை சிறு உருண்டைகள் அல்லது சிறிய பக்கோடா வடிவத்தில் பிடித்து, காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். எண்ணெயை வடித்த பிறகு, சூடாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறினால் மழைக்கால மாலை நேரத்தை இன்னும் சுவையாக மாற்றும் மொறுமொறுப்பான அவல் பக்கோடா தயார்.
Also Read: இரவு உணவிற்கு இத சாப்பிடுங்க… உடல் எடை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல நன்மைகள் இருக்கு!



