இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.28 கோடி மதிப்பிலான காசநோய் கண்டறியும் கருவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. “2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு நவீனங்களையும், முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனமும் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் மூலம், பிரதமரின் முயற்சியால் உருவான டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தை ஆதரிக்கும் வகையில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் காசநோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதன் மூலம், காசநோய்க்கு எதிரான போரை முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக ரூ.28 கோடி செலவில் 192 காசநோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.சி.அசோகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மாநில மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குநர் ஆஷா ஃபிரெட்ரிக் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் 97 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் தரப்படுகிறது.
இப்போது ஐஓசிஎல் நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகளை வாங்கும்போது 272 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறியும் செயல்பாடுகள் அதிகரிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.