தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம்
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் குறித்து இன்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்..
இந்த நிலையில் தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து கூட்டங்களில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்க தடை கோரி மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஸ்ரீ வத்சவா, அருள் முருகன் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தெரிவித்தார்… தவெக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாகவும், சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்..



