புதுச்சேரியில் வரும் 5 ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்..
சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்காமல், அவரை பார்க்க வரவழைப்பது என்ன மாதிரியான அரசியல் என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறிய பின்பு தான் தவெக மீண்டும் செயல்பட தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை புதிதாக நிர்வாக குழு நியமனம், சிறப்புப் பொதுக்குழு கூட்டம், மீண்டும் திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் SIR பணிகள் குறித்தும் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 5 ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் பகுதி வரை விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 5 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



