மதுரை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடந்த இரண்டு சம்பவங்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத்கான் (61) என்பவர், அதே பகுதியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பரான சக டெய்லரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை அருகிலுள்ள பூங்காவிற்கு விளையாட அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு 10 வயது சிறுமிக்கும் தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. வீடு திரும்பியதும் சிறுமிகள் நடந்ததை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர். இதையடுத்து பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து தெற்கு மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அப்துல் மஜீத்கானை கைது செய்தனர்.
இதேபோன்ற இன்னொரு சம்பவம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்துள்ளது. காட்பாடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வரும் நிலையில், பாட்டி வீட்டிற்கு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் பார்த்திபன் (57) என்ற டெய்லர், அந்த சிறுமிக்கு பள்ளி யூனிபார்ம் தைத்து தந்துள்ளார். யூனிபார்ம் பெரியதாக இருப்பதால், அதை சரி செய்ய மீண்டும் அளவு எடுக்க வேண்டும் என கூறி, சிறுமியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அப்போது மீண்டும் அளவு எடுப்பதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி வீட்டில் இல்லாததால் பாட்டி அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். பின்னர் சிறுமி அழுதபடியே வீட்டிற்கு வந்து, டெய்லரின் அக்கிரமத்தை தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பார்த்திபனை கைது செய்தனர்.
Read more: அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு..! திருப்பூர் காவல்துறை அதிரடி..!



