ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 என்பது 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு தொற்றுநோய் வைரஸ் ஆகும். உலக நாடுகளில் இப்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் ஆறாத ரணமாக மாறியுள்ளது. அந்த பாதிப்புகளே முழுமையாக விலகாத நிலையில், உலகளவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களை போல பெரியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், பரவல் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அரசுத் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,154 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவாக 2,165 ஆக பதிவாகி இருக்கிறது. குஜராத்தில் 1,281; டெல்லியில் 731 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 231 ஆக உள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 2 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த சுமார் என்பவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 74.
அதே போல் பட்டணம் காத்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வயது 56. இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: பேர கேட்டாலே நாவில் எச்சில் ஊறும்.. தினமும் புளி சாறு குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?