மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது..
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. மே 5-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மே 17-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.. மே 19-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டது.. அதன்படி, தேர்வு அறைக்கு வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தேர்வு அறையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தகவல் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.. மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின் தடை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின் தடை செய்யக்கூடாது என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.. டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சனை ஏற்பட்டால், அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..