கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்க்கு சம்பளமாக 200 கோடி ரூபாய்வரை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார்.
இதற்கிடையே முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவுக்கு வந்தார் அவர். அதன்படி ஹெச்.வினோத் இயக்கிவரும் ஜன நாயகன்தான் கடைசி படம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில் விஜய்யின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கிய இயக்குநர் எழில் அளித்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “துள்ளாத மனமும் துள்ளும் படத்தை எடுக்கும்போது என்னைவிடவும் விஜய்க்குதான் பயம் அதிகம் இருந்தது. நான் புதுமுக இயக்குநர் என்பதால் எப்படியாவது நான் படத்தை நன்றாக இயக்கிவிட வேண்டும் என்று அவர் நினைத்துக்கொண்டே இருந்தார்.
படத்துக்கு இன்னொரு பிளஸ்ஸாக இருந்தது சிம்ரன். அவரை நடிக்க வைக்கலாம் என்று நான் தயாரிப்பாளர் சௌத்ரியிடம் சொன்னபோது, ‘அய்யோ என்னய்யா நீ.. அந்தப் பொண்ணு கிளாமரா நடித்துக்கொண்டிருக்காங்க. அவங்க வேண்டாம்’ என்று சொன்னார். ஆனால் நானோ சிம்ரன்தான் வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்து சௌத்ரியை சம்மதிக்கவும் வைத்தேன். சிம்ரனுக்கும் கதை ரொம்பவே பிடித்திருந்தது” என்றார்.