வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக ஐபிஎல் அதிகாரி கே.விஜயகுமார், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழக கர்நாடக எல்லைகளில் காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பனை சுட்டு வீழ்த்தியவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். இவர் 1975இல் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தவர். பின்னர் சேலம், தருமபுரி மாவட்டங்களில் பணிபுரிந்து அதன் பிறகு மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணிபுரிந்தார். தமிழகத்தில் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் முதல்வரின் மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, 2001இல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு 2004இல் சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுப்பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார். இதற்காக சிறப்பு கௌரவம், பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார். 2012இல் மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்த போது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

பின்னர், மத்திய உள்துறைக்கு பணிக்கு சென்ற அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணிபுரிந்த கே.விஜயகுமார் 2018இல் ஓய்வுபெற்றார். அதன் பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராகவும், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை விஜயகுமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.