நடைபயிற்சி என்பது மிகவும் எளிமையான உடற்பயிற்சி. யாரும், எப்போது வேண்டுமானாலும், எங்கும் செய்யக்கூடிய ஒன்று. வயதானவர்களும், உடல் நலக்குறைவுள்ளவர்களும், அறுவை சிகிச்சை முடித்தவர்களும் கூட தங்களால் சுலபமாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மனச்சோர்வு, உடல் சோர்வு, மனநிலை மாற்றம், மூட்டு வலி, எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் என பல பிரச்சனைகளைத் தடுக்க நடைபயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.
சமீபத்தில் ஆரோக்கிய வட்டாரங்களில் “6-6-6 ரூல்” என்ற நடைபயிற்சி முறை பிரபலமாகி வருகிறது. அதாவது காலை 6 மணிக்கு 60 நிமிடம் நடைபயிற்சி, மாலை 6 மணிக்கு 60 நிமிடம் நடைபயிற்சி, மேலும் 6 நிமிட வார்ம்-அப் மற்றும் 6 நிமிட கூல்-டவுன் அவசியம். காலை 6 மணிக்கு நடைபயிற்சி செய்வது நாள் முழுவதும் ஆற்றலை உயர்த்தும்; மாலை 6 மணிக்கு நடைபயிற்சி செய்வது வேலை அழுத்தத்தைக் குறைத்து மனதை சாந்தப்படுத்தும்.
நடைபயிற்சியின் நன்மைகள்:
- கொழுப்பு குறையும், தசைகள் வலுப்பெறும்
- நுரையீரல் திறன் உயரும்
- இதய ஆரோக்கியம் மேம்படும்
- மன அழுத்தம் குறையும்
- நீண்ட ஆயுளை வழங்கும்
ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) வெளியிட்ட ஆய்வின் படி, நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களில் 72% பேர் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருந்துள்ளனர். மேலும் அந்த ஆய்வில், நடைபயிற்சி செய்யாதவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் ஆற்றல், உடல் கொழுப்பாக மாறி சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் அபாயங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 30 முதல் 60 நிமிடம் வரை நடைபயிற்சி மேற்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும், தமனிகள் ஆரோக்கியமாகும்.
எத்தனை அடிகள் நடப்பது சரி?
* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு 3 முதல் 7 முறை 8,000 அடிகள் நடந்தால், மரண அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* ஒருநாளைக்கு 2,337 அடிகள் நடந்தாலே இதய நோய்கள் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது.
* 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், நடைபயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42% குறைந்த அபாயம் காணப்படுகிறது.



