ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.. நாம் பெரும்பாலான வேலைகளுக்கு ஸ்மார்ட்போன்களை நம்பி உள்ளோம்.. இதனால் ஸ்மார்ட்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் விமான நிலையங்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்களில் போன்ற இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.. எனவே இதுபோன்ற பொது சார்ஜிங் வசதிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்..
ஆனால் இலவச பொது சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI அறிவுறுத்தி உள்ளது.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள FBI ”விமான நிலையங்கள், ஹோட்டல்கள் அல்லது ஷாப்பிங் சென்டர்களில் இலவச சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தீம்பொருள் மற்றும் கண்காணிப்பு மென்பொருளை உங்கள் சாதனங்களுக்கு அனுப்ப, சைபர் குற்றவாளிகள் பொது USB போர்ட்களைப் பயன்படுத்துகின்றனர்.. எனவே உங்கள் சொந்த சார்ஜரை எடுத்துச் செல்லுங்கள்..” என்று தெரிவித்துள்ளது..
பொது இடங்களில் உள்ள யுஎஸ்பி போர்ட்களில் சார்ஜ் செய்யும் போது, தீங்கு விளைவிக்கும் ஸ்பைவேர் மற்றும் மால்வேர்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பப்படலாம்.. ஹேக்கர்கள் தனிப்பட்ட சாதனங்களை அணுகுவதற்கு USB போர்ட்களை பயன்படுத்துகின்றனர் எனவும், இதன் மூலம் ஹேக்கர்கள் கடவுச்சொற்கள் உள்ளிட்ட தரவை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….
மேலும் பொது வைஃபை நெட்வொர்க்குகளை இணைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. பொது வைஃபை சேவையை பயன்படுத்தும் போது எந்த முக்கியப் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் எனவும் FBI எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆன்லைன் கணக்கிற்கும் வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்க வேண்டும்.. தொலைபேசிகளை தொடர்ந்து புதுப்பித்தல், பல காரணி அங்கீகாரத்தை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சைபர் தாக்குதல்களை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..