கொரோனா தடுப்பூசி காரணமாக நிகழும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 2 இளம் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக அவர்களின் பெற்றோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இறப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசிக்குப் பிறகு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமானால் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசிடம் தடுப்பூசி மரணங்கள் குறித்து விளக்கம் கேட்டிருந்த நிலையில், 276 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்பட்டால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இழப்பீடு கோரலாம் என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மீது முழு அனுதாபங்கள் இருப்பதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.