வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது..
அணு திட்டத்தில் ஈரானின் நிலை
தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் யூரேனியம் செறிவூட்டும் உரிமையை விடாது என்பதை தெளிவாக தெரிவித்தார். இதுவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உள்ள முக்கிய முரண்பாடு ஆகும். கடந்த ஜூன் மாதத்தில், ஈரான்–இஸ்ரேல் இடையே நடந்த 12 நாள் போரின் போது, டிரம்ப் ஈரானின் அணு தளங்களை தாக்க உத்தரவிட்டிருந்தார்.
“அணு குண்டு” – அரசியல் மொழியாக பயன்பாடு
“எங்களுக்கு அணு குண்டு வேண்டாம். எங்கள் உண்மையான அணு குண்டு என்பது – உலகின் பெரிய சக்திகளுக்கு ‘இல்லை’ என்று சொல்லும் தைரியம்” என்று அராக்சி கூறினார். இந்த வார்த்தைகள் திட்டமிட்டே சொல்லப்பட்டவை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரான் தனது அணு திட்டம் அமைதிக்கானது மட்டுமே என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளும், சர்வதேச அணு ஆற்றல் அமைப்பும் (IAEA), 2003 வரை ஈரான் ரகசியமாக அணு ஆயுத திட்டத்தை நடத்தியது என்று கூறுகின்றன.
யூரேனியம் செறிவூட்டல் குறித்து சர்ச்சை
தற்போது ஈரான், 60% வரை யூரேனியம் செறிவூட்டுகிறது. இது ஆயுத தரமான 90% அளவுக்கு மிகவும் அருகில் உள்ளது. அணு ஆயுதம் இல்லாத நாடுகளில் இவ்வளவு அதிக அளவில் யூரேனியம் செறிவூட்டும் ஒரே நாடு ஈரான்தான்.
இருப்பினும், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனெய், அணு ஆயுதம் தயாரிப்பது மத ரீதியாகத் தடைசெய்யப்பட்டதாக (பத்வா) கூறியிருப்பதை ஈரான் அதிகாரிகள் அடிக்கடி நினைவூட்டுகின்றனர்.
அமெரிக்காவின் ராணுவ அழுத்தம்
அமெரிக்கா, ஈரான்மீது அழுத்தம் கொடுக்க யு.எஸ்.எஸ் ஆப்ரஹாம் லிங்கன் “ USS Abraham Lincoln” என்ற விமான தாங்கி கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. அதோடு, போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒப்பந்தம் இல்லை என்றால் தாக்குதல் நடத்தும் திறன் அமெரிக்காவுக்கு உள்ளது என்பதைக் காட்ட முயல்கிறது.
பேச்சுவார்த்தை – “ஒரு முன்னேற்றம்”
ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான், ஓமானில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையை “ஒரு முன்னேற்றமான படி” என்று தெரிவித்துள்ளார்.
“மரியாதைக்கு மரியாதையுடன் பதிலளிப்பதே ஈரானின் நிலை. ஆனால், வலுக்கட்டாய மொழியை எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.
எதிர்காலம் இன்னும் தெளிவில்லை
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது, எங்கு நடைபெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. டிரம்ப் மட்டும், “ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது போல தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
தாக்குதல் அச்சம் குறித்து ஈரான் கவலை
அமெரிக்கா, முன்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே ஈரானை தாக்கியதை அராக்சி நினைவுபடுத்தினார். “பேச்சுவார்த்தையில் ஒரு படி பின்னால் சென்றால், அது எங்கு முடியும் என்பது தெரியாது” என்று அவர் எச்சரித்தார்..
Read More : வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! உடனே இதை செய்யுங்க..! இல்லையெனில் உங்களால் சாலையில் பயணிக்க முடியாது..!



