2026 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.. இந்த நிலையில் தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.. அப்போது முதல்வர் விஜய் சமீபத்தில் திருச்சி நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்..
அப்போது பேசிய அவர் “ பெரம்பூரில் ஜெயித்த முதல்வர் விஜய், இங்கு இருக்கும் பெரம்பூருக்கு சென்று நன்றி சொல்ல வக்கில்லை.. திருச்சிக்கு போனார்.. அதுவும் நான் சொல்லி தான் போனார்.. 20 நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் நான் சொன்ன பிறகு திருச்சி சென்றார்..
பொதுவாக நம் தலைவர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அந்த மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அறிவிப்பார்.. ஆனால் முதல்வர் விஜய் சென்ற போது ஏதேனும் ஒரு திட்டத்தை திருச்சிக்கு அறிவித்தாரா..? ஒரு திட்டமும் கிடையாது.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்னும் 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரப்போகிறது.. அதற்கான பிரச்சாரத்திற்காக போனார்..
விஜய் எப்போது வாயை திறந்தாலும், அவர் வாயில் இருந்து வரும் வார்த்தை ஒன்றே ஒன்று தான்.. எல்லாத்துக்கும் காரணம் திமுக தான்.. திருச்சியில் முதல்வர் விஜய்யின் பேச்சை கேட்டு, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.. இவரை எல்லாம் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோமே என்று வருத்தப்படுகின்றனர்..
இதுல CM சாருக்கு, கோவம் வேற வருது.. கவர்ச்சியால் தான் ஆட்சிக்கு வந்ததாக சொல்கிறார்கள் என்று. சரி. கவர்ச்சியில் ஜெயிக்காமல் வேறு எதை வச்சு ஜெயிச்சீங்க..? கலைஞர் மாதிரி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றீர்களா..? எங்கள் தலைவர் மாதிரி மிசா சட்டத்தில் சிறையில் இருந்து வந்தீர்களா..? கட்சி ஆரம்பித்தே இரண்டு வருடங்கள் தான் ஆகிறது..
மாநில உரிமைக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறீர்களா..? ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறீர்களா..? ஏதாவது ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா..? தமிழ்நாடு முழுவதும் உங்கள் கொள்கை என்னவென்று சொல்லி ஓட்டு கேட்டீர்களா..? உங்கள் வேட்பாளர் பெயராவது தெரியுமா..? எதுவுமே தெரியாது..? இதை தான் எங்கள் தலைவர் கவர்ச்சி அரசியல் என்று சொன்னார்..
அதுமட்டுமின்றி திருச்சி ‘வாயில் நல்லா வந்துரும்..’ என்று சொல்கிறார்.. வாயில் என்ன வரும்.. தமிழ்நாட்டு மக்கள் வாயில் நிறைய வரும்.. இதுவரைக்கும் உருப்படியாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை..
எதைப்பற்றி கேட்டாலும் திமுக Vs தவெக.. எதற்கெடுத்தாலும் திமுக செய்த சதி என்று கூறுகிறார். தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என டி.ராஜேந்தர் மாதிரி ரைம்மிங்கில் டயலாக் பேசுகிறார்.. நாங்கள் பார்க்காத வெற்றியும் கிடையாது.. நாங்கள் பார்க்காத தோல்வியும் கிடையாது.. எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும் மீண்டு எழுந்து வருவோம்.. எந்த காலத்திலும் திமுக மக்களை விட்டு தூரமாக நின்றதே கிடையாது.. யாரு தூரமாக நிற்கப் போவது,, யார் ஓடப் போவது என்பதை மக்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள்..” என்று தெரிவித்தார்..



