சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், எந்தவொரு தனிநபரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரையாற்றினார். அப்போது, கடந்த கால திமுக ஆட்சி மற்றும் சர்க்காரியா ஆணைய விவகாரங்களை சுட்டிக்காட்டி காட்டமாக விமர்சித்த அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘மிசா’ சிறைவாசம் குறித்து பேசும்போது தனது முகத்தில் கையை வைத்து ஒரு சைகையைச் செய்தார். முதலமைச்சரின் இந்த உடல்மொழி, உருவகேலி செய்யும் வகையில் அமைந்ததாக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியதுடன், எதிர்க்கட்சிகள் சார்பில் இதற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின் இடையே நான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையாக நிகழ்ந்ததே அன்றி, எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதல்ல. இதனை தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கும் விதமாகவோ அல்லது மனதை புண்படுத்துகிற செயலாகவோ தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : 50 வருடங்களாக தொடரும் சர்க்காரியா ஆணைய சர்ச்சை..! எதற்காக அமைக்கப்பட்டது..? இறுதியில் என்ன ஆனது..?



