தெற்காசியாவை சேர்ந்த மக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்களை விடவும் இந்திய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த பாதிப்பு உண்டாக காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கிறது.
ஐரோப்பிய மக்களை விடவும் தெற்காசிய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த நோய் வருவதற்கான 2 விதத்திலான மரபணு கூறுகள் காரணமாக இருக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்து இருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கின்ற துந்தே ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் பால்மர் மற்றும் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் இணைந்து இந்த ஆய்வை நடத்தி இருக்கின்றன. இந்தியர்களுக்கு ஐரோப்பியர்களை விடவும் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் உண்டாவததுடன் அதன் எதிரொலியாக ஆயினும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு காணப்படுகிறது என்றாலும் கூட அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்து தான் அவர்களுக்கான பாதிப்புகள் மற்றும் விளைவுகள் மாறுபட்டு காணப்படுகின்றன.
இந்தியாவைச் சேர்ந்த மக்களை பொறுத்தவரையில் ரெடினோபதி, நியூரோபதி என்ற நுண் நரம்பியல் தொடர்புடைய நோய்கள் அவர்களை தாக்குவதற்கும் அதிக சாத்தியம் இருக்கின்றன. இந்தியாவில் யாருக்கெல்லாம் நீரிழிவு நோய் ஏற்பட்டிருக்கிறது? எப்படி இது அதிகரித்து காணப்படுகிறது? சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது மற்ற மக்களை விடவும் இவர்களுக்கு எப்படி அது பலன் தருகிறது? சில நோயாளிகளுக்கு தகுதியான பிரச்சினைகள் இருப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவர் சுந்தர்ராஜன் சீனிவாசன் தெரிவித்ததாவது, டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கு இனரீதியான மரபணு வேறுபாடுகளே காரணம் என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இந்த மரபணு வேறுபாடுகளை பொறுத்து தெற்காசிய மக்களுக்கு இனி வரும் காலங்களில் வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டைச் சார்ந்தவர்கள் துரித உணவு முறையை கைவிட்டு, பாரம்பரிய உணவு முறையை தேர்வு செய்தாலே சர்க்கரை நோய் பெரிய அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். அதிலும் குறிப்பாக தமிழர்களின் பண்டைய உணவு பழக்கத்தில் இருந்த கேழ்வரகு, கம்பு, சாமை தினை உள்ளிட்ட சிறுதானிய உணவுகளையும் பாரம்பரிய நெல் ரகங்களையும் சாப்பிட்டாலே சர்க்கரை நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
மாவுச்சத்து உணவுகளை பெருமளவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி உடற்பயிற்சி செய்வது, மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது உள்ளிட்டவை இதற்கு பெருமளவில் பலன் தரும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு வாழ்வியலை மேம்படுத்திக் கொள்வதன் மூலமாக சர்க்கரை நோயை முற்றிலுமாக விரட்டி அடிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.