ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில், திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடி இருந்தார். அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணத்தையும் ஆளுநர் ரவி விமர்சித்திருந்தார். அத்துடன் தமிழ்நாடு அரசால் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் சட்ட திட்டங்களையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இப்படியாக ஆளுநரின் செயல் தொடர்ந்து அடாவடி தனமாக இருப்பதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ”தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சி பிரதிநிதிபோல பேசி வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் அவராக பேசுகிறாரா இல்லை, அறிக்கையை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. ஆளும் கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்க முடியாது. ஆளுநர் ஆளுங்கட்சி மோதலால் மக்களின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.