சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும், சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார். திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்துள்ளார். அதுமட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் ஆளுநர் படிக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு. உரையில் இடம் பெறாமல் ஆளுநர் சொந்தமாக சேர்த்து கொண்டவை அவை குறிப்பில் இடம் பெறாது” எனக்கூறினார். முதலமைச்சர் பேசியக் கொண்டிருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். சட்டப்பேரவையில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு, முதலமைச்சர் கண்டனத்தை அடுத்து பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில், ஆளுநர் கிளம்பியதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக இருப்பதாகவும், எந்தவித பெரிய திட்டங்களும் இடம்பெறவில்லை என பேசினார். ஆளுநர் உரை வெற்று உரையாக இருப்பதாகவும், ஏமாற்றம் மட்டும் மிஞ்சுவதாகவும் விமர்சனம் செய்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அடியோடு சீர்குலைந்து விட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, பேரவையில் ஆளுநரை அமர வைத்து முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் மரபுக்கு எதிரானது எனவும் விமர்சனம் செய்தார்.