கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி நந்தினி (30). இருவருக்கும் கல்லூரி காலத்தில் இருந்தே பழக்கம் இருந்த நிலையில், காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் கவுதம் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களாக இவருக்கு வேலை அதிகம் இருந்ததால் மனைவியிடம் அதிகம் பேசவில்லை என கூறப்படுகிறது. சம்பவ தினமான வியாழன் அன்று மனைவி நந்தினிக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தனக்கு சாக்லேட் வாங்கிதர வேண்டும் என கணவரிடம் மனைவி கேட்டுள்ளார். சரி வாங்கித் தருகிறேன் என கூறிவிட்டு வேலைக்குச் சென்ற கணவர், சொன்னது போல அதை வாங்கி வரவில்லை. நேரம் சென்ற பின்னர் கவுதமுக்கு நந்தினி ஃபோன் செய்துள்ளார். ஆனால், கவுதம் அழைப்பை எடுக்கவில்லை.
இந்நிலையில், வேலைகளை முடித்துவிட்டு கவுதம் தனது வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்த போது தான் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில் மனைவி நந்தினி கணவருக்கு மேசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நான் போகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து பீதி அடைந்த கவுதம் மனைவிக்கு போன் செய்து பார்த்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காத நிலையில், பக்கத்து வீட்டுகாரர்களிடம் அலெர்ட் செய்து வீட்டிற்கு விரைந்துள்ளார். வீடு தாழிட்டு இருந்த நிலையில், கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது கவுதமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மனைவி நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், நந்தினி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கவுதம் மீது நந்தினி வீட்டார் எந்த புகாரும் இதுவரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.