ஐரோப்பாவின் பல நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஊழல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் ஊழல் அளவு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என்று குளோபல் டிரான்ஸ்பேரன்சி (Global Transparency) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் ஊழல் மதிப்பெண் (Corruption Score) 2025-ல் 39 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 91-வது இடத்தை பிடித்துள்ளது. 2024-ல் இந்தியாவின் நிலை பெரிதாக மாறாமல் இருந்த நிலையில், 2025-ல் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் ஊழல் வழக்குகள் குறைந்துள்ளன
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியா தனது ஊழல் தரவரிசையில் சற்று முன்னேறி உள்ளது.. 2023-ல் இந்தியா 93-வது இடத்தில் இருந்தது. 2024-ல் 92-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2025-ல் மேலும் முன்னேறி 91-வது இடத்தை அடைந்துள்ளது.
2025-ல் இந்தியாவின் ஊழல் மதிப்பெண் 39 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட சிறிய உயர்வாக இருந்தாலும், இந்த முன்னேற்றத்திற்கான தெளிவான காரணங்களை அதிகாரப்பூர்வ தரவுகள் விளக்கவில்லை.
இன்னும் அபாய நிலையில் உள்ள இந்தியா
தரவரிசையில் சிறிய முன்னேற்றம் இருந்தாலும், ஊழலை திறம்பட கட்டுப்படுத்தும் விஷயத்தில் இந்தியா இன்னும் பல நாடுகளுக்கு பின்னே உள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. ஊழல் குறியீட்டில் 39 என்ற மதிப்பெண் இன்னும் ‘உயர் அபாய மண்டலம்’ (High-Risk Zone) என கருதப்படுகிறது. இதனால், இந்தியாவில் ஊழல் பிரச்சினை இன்னும் முழுமையாக தீரவில்லை என்ற கவலை தொடர்கிறது.
எந்த அடிப்படையில் இந்த ஆய்வு?
இந்த ஊழல் ஆய்வு, முக்கியமாக நான்கு காரணிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, ஜனநாயக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசியல் நன்கொடைகள், அரசியல் மற்றும் நிர்வாக நிறுவனங்களின் நிலை, சேவைகளுக்காக பணம் கொடுத்து அனுமதி பெறும் நடைமுறைகள், பத்திரிகையாளர்களை அரசுகள் குறிவைக்கும் நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
அறிக்கையை வெளியிட்ட குளோபல் டிரான்ஸ்பேரன்சி, “பெரிய நாடுகளுக்கிடையிலான போட்டி, சர்வதேச விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் போக்கு காரணமாக, உலக ஒழுங்கு கடும் அழுத்தத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உலகளாவிய சவால்கள்
ஆயுத மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், சமூகங்கள் பிரிவினை மற்றும் முரண்பாடுகளால் அதிகமாகப் பிளவுபட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் ஜெர்மனி மட்டுமே முன்னேற்றம்
ஊழல் தொடர்பான இந்த அறிக்கையில், 80-க்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற நாடுகள் வெறும் 7 நாடுகள் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஊழல் பிரச்சினை அதிகரித்து வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் ஊழல் மதிப்பெண்கள் குறைந்துள்ளன.
ஐரோப்பாவில், ஜெர்மனி மட்டுமே ஊழல் வழக்குகள் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரிட்டன் தற்போது முதல் 20 நாடுகளின் பட்டியலுக்கு வெளியே உள்ளது.
அமெரிக்காவிலும் சரிவு
அமெரிக்காவின் ஊழல் மதிப்பெண்ணும் குறைந்துள்ளது. அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், ஊழலை வேரறுக்க வேண்டும் என்று பேசிவரும் நிலையில், இந்த சரிவு கவனத்தை ஈர்த்துள்ளது. 2024-ல், உலகளாவிய ஊழல் குறியீட்டில் அமெரிக்காவின் தரவரிசை 28-வது இடத்திலிருந்து 29-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
சீனாவில் மாற்றமில்லை
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சீனாவில் ஊழல் வழக்குகள் குறையவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவின் ஊழல் மதிப்பெண் 43 ஆகவே மாறாமல் உள்ளது. ஊழல் தரவரிசையில், சீனா 76-வது இடத்தில் உள்ளது.
உலகத்திற்கு தேவை நேர்மையான தலைமையும் வலுவான அமைப்புகளும்
இந்த சவால்களை எதிர்கொள்ள, நேர்மையான தலைவர்கள் மற்றும்
சுயாதீனமாகவும் வலுவாகவும் செயல்படும் அரசியல் மற்றும் நிர்வாக நிறுவனங்கள்
மிகவும் அவசியம் என்று குளோபல் டிரான்ஸ்பேரன்சி தெரிவித்துள்ளது. பொது நலனை பாதுகாக்க, நியாயம், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படும் அமைப்புகள் உலகிற்கு தேவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : உங்கள் காதலிக்கு கொடுக்கும் ரோஜா இவ்வளவு தூரம் கடந்து வருகிறதா..? வியக்க வைக்கும் தகவல்கள்..!!



