தயிர் மற்றும் மோரில் எது சிறந்தது..? இந்த கோடை வெயிலுக்கு எதை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்..?

இந்திய உணவுக் கலாச்சாரத்தில் தயிருக்கும், மோருக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதிலும், தமிழ்நாட்டில் கோடைகாலங்களில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு பானையில் நிரப்பிய மோர் வழங்கி உபசரிக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. தயிர் கெட்டியானது. பாலை காய்ச்சி, புளிக்க வைத்த பின்னர் கிடைப்பது. அதே தயிரில் உள்ள வெண்ணெய்யை பிரித்து எடுத்த பின் கிடைப்பது மோர். மோர் திரவ வடிவில் உள்ளது. இரண்டையும் தான் நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம். நிச்சயமாக இரண்டுக்குமே தனித்த குணாதிசயங்களும், ஆரோக்கிய பலன்களும் உண்டு. ஆனால், இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.

தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியா குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். அதில் புரதச்சத்து, ப்ரோபயாடிக்ஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகியவை கிடைக்கும். அதேபோல மோர் நம்முடைய தாகத்திற்கு உகந்த பானமாக இருக்கும். தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்தக் கூடியதாகும்.

தயிர் மற்றும் சத்துக்கள் : பாலை நாம் புளிக்க வைக்கும்போது அதிலுள்ள லேக்டோஸ் சர்க்கரை சத்தானது, லேக்டிக் ஆசிட் போல மாறுகிறது. நம் குடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நன்மை பயக்கும் பாக்டீரியா தயிரில் நிறைவாக கிடைக்கும். நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் இந்த நன்மை பயக்கும் பாக்டீரியா உதவியாக அமைகிறது. தயிரில் உள்ள மேம்பட்ட புரதச்சத்து நம் தசைகளின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுகிறது. தயிரில் இருந்து கிடைக்கும் கால்சியம் சத்து நம் பற்களையும், எலும்புகளையும் பலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தயிரை வாடிக்கையாக சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மோர் பயன்கள் : மோரில் உள்ள லாக்டிக் அமிலம் நம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது. அஜீரணம் மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சனைகளுக்கு இது தீர்வு தருகிறது. மோரில் புரதம், கால்சியம், விட்டமின் பி12, ரிபோஃபிளேவின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. மோர் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது. மோரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. குறைந்த கலோரி கொண்ட மோர் அருந்துவதால் நம் உடல் எடை குறையும். ஒட்டுமொத்தமாக நம் உடலுக்கு மோர் குளிர்ச்சி தருகிறது.

Read More : ’தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை’..!! சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்..!!

Chella

Next Post

விளவங்கோடு இடைத்தேர்தல்..!! வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் அறிவிப்பு..!!

Tue Apr 16 , 2024
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார். இதனால், தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதோடு சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விளவங்கோடு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் […]

You May Like