ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் நான் (எலான் மஸ்க்) தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தினார். இதற்கு 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டார். அதன்படி, அவர் புதிய தலைமை செயல் அதிகாரியை (சி.இ.ஓ) அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால், அது ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கி ட்விட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சி.இ.ஓ. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் சி.இ.ஓ. என்று எழுதியிருந்தது.