தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி, ரஃபேல் கடிகாரத்தின் ரசீதுடன், தனது சொத்து மதிப்புடன் வெளியிடப்படும் என்றும், தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாகவும் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து, ரபேல் வாட்சை வாங்கியதாக தெரிவித்தார்.. மேலும் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் என்று கூறிய அண்ணாமலை, தனது நண்பர் கொடுத்த ரஃபேல் வாட்ச்சின் விலை ரூ.3 லட்சம் என்று அதற்கான ரசீதையும் காட்டினார்..
மேலும், ஏற்கனவே அறிவித்ததைப் போன்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்… ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்..
இந்நிலையில் இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.. அதன்படி முதல் கேள்வியை எழுப்பியுள்ளார்.. தனது ட்விட்டர் பதிவில் “ கேள்வி எண் : 1 : திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் மகனும் அமைச்சருமான திரு உதயநிதி ஸ்டாலின் நோபல் நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார்.
திமுக அமைச்சர் திரு அன்பில் மகேஷ், நோபல் நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார். துபாய் சென்ற தமிழக முதல்வர் திரு ஸ்டாலின், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்று தமிழக மக்களின் சார்பாக நான் கேள்வி எழுப்புகிறேன். பதில் அளிப்பீர்களா திரு.. ஸ்டாலின்..” என்று பதிவிட்டுள்ளார்..