2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நிர்வாகிகள் நியமனம், நீக்கம், ஆலோசனைகள், கூட்டணி பேச்சுவார்த்தை என அதிரடியாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிலை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
ஆனால், பாமகவுக்கு தற்போது நிலவி வரும் சூழலால் அக்கட்சி நிர்வாகிகளே அதிருப்தியில் உள்ளனர். ராமதாஸ் – அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் தான், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னை வந்துள்ள ராமதாஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும். வரும் வியாழக்கிழமை தைலாபுரத்தில் நல்ல செய்தியை அறிவிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். ராமதாஸின் இந்த அறிவிப்பால் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என தெளிவாக தெரிகிறது. அதேபோல், பாமகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.