தமிழ்நாட்டிற்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. புதிய தமிழகம் கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது..
இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.. அப்போது தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுமா அல்லது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இறுதியாக அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ 234 தொகுதிகளிலும் வெற்றி பெற எவ்வாறு செயல்பட வேண்டும் என அமித்ஷா உடன் ஆலோசித்தேன். தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் பேசவில்லை, ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்தே பேசினேன்.. சசிகலாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வருவதற்கான எந்த ஒரு முயற்சியும், திட்டமும் இல்லை..
பீகாரில் வெற்றிபெற்றதை போல வரும் தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது தொடர்பாக ஆலோசனை செய்தோம்.. ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பியூஷ் கோயலும் சென்னை வர முடியாது என்பதால் நான் டெல்லி வந்தேன்.. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படாததால் தமிழ்நாட்டிற்கு முறையாக நிதி வரவில்லை..” என்று தெரிவித்தார்..



