தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.
பிஎம் ஸ்ரீ (PM SHRI – Pradhan Mantri Schools for Rising India) என்பது புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ முழுமையாகச் செயல்படுத்தி, நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை அதிநவீன முன்மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் மத்திய அரசின் திட்டமாகும். இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளுக்கு நவீன உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது..
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.. அதாவது, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கற்க வேண்டும்..
ஆனால் இந்த திட்டம் தமிழகத்தின் இருமொழி கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வந்தது.. இதனால் மத்திய அரசு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்தது.. இதனால் தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பள்ளி பராமரிப்பு பணிகளில் கடும் சிக்கல் நீடித்து வந்தது..
இந்த சூழலில் தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்து தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசு சமீபத்தில் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், புதிய அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது..
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று முக்கிய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்தும் பேசியிருக்கிறோம்.. நமது கொள்கை சார்ந்து எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை செய்வோம்.. இரு மொழிக் கொள்கை என்பது நமது பள்ளிக் கொள்கை மட்டும் கிடையாது..
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. உறவுகளோடு பேச தாய் மொழி. உலகத்தோடு பேச ஆங்கிலம் என்ற கொள்கையில் இருக்கிறோம்.. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் தொடரும்.. அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..



