பஞ்சாப் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல் பிடுங்கச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கணவருடன் வசித்து வந்தவர் ஸ்ரீமதி (30). இவர் கடுமையான பல் வலி காரணமாக அங்குள்ள பஞ்சாப் மருத்துவமனை மற்றும் மருத்து பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் பல்லை பிடுங்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்கள். இதற்காக அந்த பெண் காலை 10 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றார்.
பல் பிடுங்கும் முன்பாக அவருக்கு வலி தெரியாமல் இருக்க மயக்கமருந்து (அனஸ்தீசியா) கொடுக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால்அதிர்ச்சியடைந்த பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக மூத்த மருத்துவர்களை அழைத்துள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மயக்க நிலைக்கு சென்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.ஆர். கருவி மூலம் உயிர்ப்பிக்க முயற்சி செய்தார்கள் ஆனால் அந்த பெண் உயிரிழந்துவிட்டார். மருத்துவ நிபுனர், அனஸ்தீசியா சிறப்பு நிபுணர், மூத்த பல்மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியில் இருந்துள்ளனர். ஆனால் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் , டாக்டர் ஹேமந்த் பத்ரா கூறுகையில் , ’’ மயக்க மருந்து அளித்ததால் உயிரிழக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே நுரையீல் வீக்கம் இருந்துள்ளது. கார்டியோபுல்மோனாரி எனப்படும் இருதயம் சார்ந்த நோய்தான் இதற்கு காரணம் ’’ என தெரிவித்துள்ளார்.
நுரையீரல் வீக்கம் என்பது , அதிகப்படியான திரவத்தை சுரப்பதால் ஏற்படும் பிரச்சனை எனவும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறப்புக்கான சரியான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைக்க வேண்டும். பின்னர்தான் என்ன நடந்தது என தெரியவரும் என்றனர்.
மேலும், நோயாளிக்கு இதே போல அதிகப்படியான மயக்க மருத்து கொடுத்ததால் பி.ஜி.ஐ.எம்.ஆர். என்ற நிறுவனத்தில் இது போல 5 சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. எலும்பியல் , நரம்பியல் அறுவை சிகிச்சையின் போது நடந்த நிகழ்வுகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் நடந்தது எனதெரியவந்துள்ளது. இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளியாகும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.