டெல்லியில் ஷ்ரத்தாவாக்கர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து அதே மாதிரியான கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வகையில், ஹைதராபாத்தில் மே 24ஆம் தேதி (நேற்று) நடுத்தர வயதுப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் குப்பைக் கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதில் துண்டிக்கப்பட்ட தலை 55 வயதான அனுராதா என அடையாளம் காணப்பட்டது. அவர் தனது வீட்டு உரிமையாளரான 48 வயதான பி சந்திர மோகனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அனுராதாவுக்கும் சந்திர மோகனுக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறு காரணமாக இந்த கொலை அரங்கேறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து சந்திரமோகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி சந்திர மோகன், மே 12ஆம் தேதியே அனுராதாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு கல் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதுவரை துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருக்க உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாதுகாத்து வந்துள்ளார். மேலும் நாற்றம் வராமல் இருக்க ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார்.
அனுராதாவின் தலையை ஒரு கருப்பு பாலித்தீன் கவரில் வைத்து, குப்பைக் கிடங்கில் வீசியதையும் ஒப்புக் கொண்டார். மே 17ஆம் தேதி துப்புரவு பணியாளர் அதை கண்டுபிடித்துள்ளார். சந்திர மோகன் அனுராதாவுடன் உறவு கொண்டிருந்தார். அவரது வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்தார். அனுராதா ஒரு கந்து வட்டிக்காரர். சந்திர மோகன் அனுராதாவிடம் சுமார் ரூ 7 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துமாறு அனுராதா அவருக்கு அழுத்தம் கொடுத்ததால், அனுராதாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டார். மே 12ஆம் தேதி பணப்பிரச்சனை காரணமாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் சந்திரமோகன், அனுராதாவை கத்தியால் தாக்கி, கொலை செய்தார். இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்திர மோகன் அனுராதாவின் உடலை அப்புறப்படுத்த 2 சிறிய கல் வெட்டு இயந்திரங்களை வாங்கி உடலை 6 பகுதிகளாக வெட்டினார் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மே 15ஆம் தேதி சந்திரமோகன் தலையை ஆட்டோவில் குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தி விட்டு சென்றுள்ளார். துர்நாற்றத்தை மறைக்க டெட்டால், வாசனை திரவியங்கள், ஊதுபத்தி குச்சிகள், கற்பூரம் இவைகளை பயன்படுத்தியுள்ளார். சந்திர மோகன் அனுராதாவின் மொபைலில் இருந்து அவருடைய உறவினர்களிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.