அக்னி நட்சத்திர காலம் இன்று முதல் தொடங்குகிறது. வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தை எளிதில் கடந்து விடலாம் என மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21ஆம் தேதி தொடங்கி, வைகாசி 14ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.
சூரியன் பயணம் சித்திரை மாதம் மேஷம் ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியில் முடிகிறது. மே மாதம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கும் சூரியன், பரணி நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்கின்றனர். இந்த கால கட்டத்தை கத்திரி வெயில் காலம் என்றும் கூறுகின்றனர். இது தோஷகாலமாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தனர்.
அதாவது இன்று மே 4ஆம் தேதி தொடங்கி, வருகிற 29ஆம் தேதி முடிவடைகிறது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும். அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதால் இனி வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். கோடை காலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், இளநீர், சர்பத், பழங்கள், மோர் சாதம், நீராகாரம் போன்ற ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்வது நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பததத்தின் அளவு கூடியிருப்பதாலும் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும் எதிர்பார்க்கலாம்.