தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை முன்னேற்றவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, நிலமற்றவர்களுக்கு பட்டா நிலம், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கான மானியம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், இத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், முன்னின்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அமைச்சகமே அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக மானியத்துடன் தாட்கோ மூலம் கடனும் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், இதுகுறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதே வேதனைக்குரிய விஷயம். குறிப்பாக, தமிழ்நாட்டில் பழங்குடியின மக்கள் பலருக்கு அரசு தங்களுக்கு இந்த வசதிகளை எல்லாம் செய்து தருகிறது என்பது தெரியாமலேயே இன்றளவும் இருந்து வருகின்றனர். ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினருக்கு செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்றாக அவர்களுக்கு ஆவின் பாலகம் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் பாலாக அமைக்க விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதில் விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஆவின் பாலகம் அமைக்க பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.