செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட விளையாட்டு, கிரிக்கெட் எனலாம். இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களை காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகம். அதனால்தான் கிரிக்கெட் வீரர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவர்களை சுற்றிவளைத்து விடுவார்கள். அப்படி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி திரும்பியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா. செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்ததால், பிருத்வி ஷா மீதும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, மும்பையில் தனது நண்பர்களுடன் பிரித்வி ஷா தனது காரில் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலுக்கு வந்த கும்பல் ஒன்று பிரித்வி ஷாவிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவதாக கேட்டுள்ளனர். அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த கும்பல் மீண்டும் ஒரு செல்ஃபி எடுக்க கேட்டிருக்கிறார்கள். இதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தவுடன் அந்த கும்பல் பிரித்வி ஷாவுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகிகள் பிரித்வி ஷாவிடம் மோதலில் ஈடுபட்ட கும்பலை வெளியே அனுப்பி இருக்கிறது. அப்போது திடீரென்று மறைந்திருந்த கும்பல் பிரித்வி ஷாவின் காரை நிறுத்தி அவரிடம் மோதலில் ஈடுபட்டது.
அப்போது பிரித்வி ஷாவிடம் பணம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் உங்கள் மேல் பொய் புகார் கொடுப்போம் என்றும் அந்த கும்பல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை பிரித்வி ஷா பொருட்படுத்தவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் பிரித்வி ஷாவின் சொகுசு காரில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இதனை அடுத்து பிரித்வி ஷாவின் நண்பர்கள் அவரை வேறு ஒரு காரில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பிரித்வி ஷா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.