கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் வசிப்பவர் முகிலன்(21) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். முகிலன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதான பெண்ணிற்கு வாட்ஸாப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார்.
இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் முகிலனைக் கண்டித்துள்ளனர். அப்போதும், தனது செயல்களை முகிலன் நிறுத்தவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் முகிலன் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டு வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். இதனை பார்த்த பெண்ணின் உறவினர்கள் முகிலனை பெண்ணின் வீட்டிற்குள்ளேயே மடக்கி பிடித்து அடித்துள்ளனர். மேலும் வாயினை மூடி கை, கால்களைக் கட்டி நிர்வாணப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் இருந்த சொம்பினை எடுத்து அதனை சூடுபடுத்தி முகிலனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் முகிலனின் உடம்பில் 8 இடங்களில் சூடுவைத்துள்ளனர். இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
அதன்பின்னர் வாலிபரை அந்த உறவினர்கள் 3 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமத்தித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கச்சிராப்பாளையம் காவல்துறையினர் முகிலனை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் முகிலன் தனக்கு நடந்ததை அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். மேலும் தலைமறைவாகியுள்ள மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.