தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே உள்ள கிளீவ்லேண்டில், ஒரு முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.
ஜம்பர்ஸ் முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்காவில் உள்ள முறைசாரா குடியிருப்புகள் என்பவை, பெரும்பாலும் குடிசைகள் அல்லது அதுபோன்ற கட்டமைப்புகளைக் கொண்ட, திட்டமிடப்படாத குடியிருப்புப் பகுதிகளாகும். தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை, மேலும் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஒரு வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் வந்து, இரண்டு நுழைவாயில்கள் வழியாக குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் பல துப்பாக்கிக் காயங்களுடன் பலரை அதிகாரிகள் கண்டனர். அங்கு 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர், மேலும் ஒரு நபர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த ஒன்பது பேரும் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தென்னாப்பிரிக்காவின் துப்பாக்கிச்சூடு பிரச்சனை
தென்னாப்பிரிக்காவில் உலகின் மிக உயர்ந்த கொலை விகிதங்களில் ஒன்று உள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 60 பேர் கொல்லப்படுகின்றனர். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பல முக்கியத்துவம் வாய்ந்த பெருந்திரள் துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ளன, அவற்றில் டிசம்பரில் நடந்த இரண்டு சம்பவங்களில் மொத்தமாக 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவற்றில் ஒன்றில் பல துப்பாக்கிச்சூடு செய்பவர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடுகள் சில சமயங்களில் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதைச் சுற்றியும் செயல்படும் சட்டவிரோத சுரங்கக் கும்பல்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. கிளீவ்லேண்ட் என்பது சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு புறநகர்ப் பகுதியாகும்.



