மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத்தேர்வு நடைபெறும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வில் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள். பதவி விவரங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் ‘mySSC’ என்ற செயலி மூலம் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.