திருவள்ளூர் சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்து, பெண்ணையும் தாக்கிவிட்டு வடமாநில இளைஞர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குட்டுலு. பீகாரை சேர்ந்த 25 வயதான இவர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். இதையடுத்து, வழக்கம்போல் பணி முடிந்து இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மனைவி மற்றும் குழந்தைகள் காணாமல் போனதை கண்டு துவர்க்கா பார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அப்போது அருகில் உள்ள குட்டுலு வீட்டிற்கு சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியதையடுத்து பின்னர் அங்கு சென்று பார்த்தபோது, 2 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு, பலத்த காயங்களுடன் மனைவி ரத்த வெள்ளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோழவரம் போலீசார், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளை கொன்று, பெண்ணையும் தாக்கிவிட்டு குட்டுலு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய வடமாநில இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.