தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவருடைய மனைவி சாந்தி(56) இவருடைய மகன் விஜய் ஆனந்த் (35) இவர்கள் இருவரும் கடந்த நான்காம் தேதி மாலை வீட்டிலேயே நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த வழக்கு குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான விஜய்ஆனந்த் அவருடைய நண்பர்கள் ஆன பள்ளி பாளையத்தை சேர்ந்த கார்த்திக், அருண் உள்ளிட்டவுடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூரில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததும், தொழில் பங்குதாரர்களால் 25 லட்சம் ரூபாய் வரையில் ஏமாற்றப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதேபோல தற்கொலை செய்வதற்கு முன்பாக விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக், அருண் உள்ளிட்ட இருவரிடமும் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.